< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறு: 1½ வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
மாநில செய்திகள்

குடும்ப தகராறு: 1½ வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

தினத்தந்தி
|
30 May 2024 1:09 AM GMT

ரோஷினி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி ஏலக்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரோஷினி (22). இவர்களுக்கு 1½ வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரோஷினி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று காலை ராஜா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ரோஷினி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் ரோஷினி நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அங்கு ரோஷினி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகிலேயே குழந்தையும் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் ரோஷினி மற்றும் குழந்தை நிதர்ஷன் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரோஷினி குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு மின்விசிறியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் ரோஷினியின் கணவர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் அம்பாயிர நாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

1½ வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்