< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே போலி வக்கீல் கைது
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அருகே போலி வக்கீல் கைது

தினத்தந்தி
|
28 Feb 2023 8:30 PM GMT

பெரியகுளம் அருகே போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.

தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த தினேஷ் மனைவி துர்க்கையம்மாள் (வயது 32). இவர், சொத்து பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போடி அருகே உள்ள ஜே.கே.பட்டியை சேர்ந்த சக்திவேல் (45) என்பவரை அணுகியுள்ளார். அப்போது வழக்கு பதிவு செய்ய முன்பணமாக ரூ.3 ஆயிரத்தை துர்க்கையம்மாள் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கு நடத்த ரூ.25 ஆயிரம் வேண்டும் என்று சக்திவேல் கூறினார்.

அதன்படி, அந்த பணத்தை துர்க்கையம்மாள் கொடுத்தார். ஆனால் வழக்கு தொடர்பாக எந்த பணியையும் சக்திவேல் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த துர்க்கையம்மாள், இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது சக்திவேல், துர்க்கையம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர், பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சக்திவேல் போலி வக்கீல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்