< Back
மாநில செய்திகள்
கோடைகாலம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கோடைகாலம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்

தினத்தந்தி
|
30 July 2023 7:49 PM GMT

தஞ்சையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 102 டிகிரி கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

தஞ்சையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 102 டிகிரி கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கம். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலமான மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிக பட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

வெயில் குறையவில்லை

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் செய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கொளுத்தியதை போன்று வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தாலும் காற்று வீசி வருகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவில் காற்று வீசுகிறது. ஆனால் பகல் நேரங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால் பகலில் அனல்காற்று வீசுகிறது. நேற்றும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

மக்கள் நடமாட்டம் குறைந்தது

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அனல் காற்றினால் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் தலை மற்றும் முகத்தை துணியால் மூடிக்கொண்டும், குடைபிடித்தவாறும் சென்றனர்.. தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட இளநீர், கரும்புசாறு, மோர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் மற்றும் பழச்சாறு, குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி பருகினர். இதனால் அந்த கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது நேற்று விடுமுறை என்பதால் பெரிய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கோவிலுக்கு வந்தவர்களும் வெயிலின் தாக்கம் காரணமாக தலையை துணியால் மூடியபடி சென்றனர்.

மேலும் செய்திகள்