< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் என்ஜீனியர் மர்ம சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் என்ஜீனியர் மர்ம சாவு

தினத்தந்தி
|
13 Nov 2022 6:30 PM GMT

பெரம்பலூரில் சிவில் என்ஜீனியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மர்ம சாவு

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சுடுகாடு அருகே உள்ள பாலத்தின் கீழே நேற்று காலை ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் உடனடியாக அருகே உள்ள பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

சிவில் என்ஜீனியர்

விசாரணையில் இறந்தவர் பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த முருகேசன் (வயது 58) என்பதும், சிவில் என்ஜீனியரான அவர் கட்டிடம் கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த முருகேசனுக்கு முத்துசெல்வி என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர். முத்துசெல்வி எசனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

போலீசார் விசாரணை

மது அருந்தும் பழக்கம் உடைய முருகேசன் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வழக்கமாக மது அருந்தும் இடமான பாலத்தின் கீழே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மது போதையில் கீழே விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு பாலத்தின் கீழே வீசி விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்