< Back
மாநில செய்திகள்
ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
மாநில செய்திகள்

ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

தினத்தந்தி
|
16 July 2024 12:13 PM GMT

ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ரூ,2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்ததாக கூறி அவர் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்கை பதிவு செய்தது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை, இந்த வழக்கில் கடந்த மாதம் 26-ம் தேதிஅமலாக்கதுறை கைது செய்தது.

அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மும்பை உள்ளிட்ட இடங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பதில் அளித்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதனால் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனுமதி அளித்துள்ளார். மேலும் 18-ந்தேதி உறவினர்களை சந்திக்க அனுமதித்து மீண்டும் 19-ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்