'பிரதமர் மோடி உறுதியளித்தபடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன' - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
|இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கார்' எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 7-வது ரோஜ்கார் மேளா பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் 109 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக இந்தியா முழுவதும் மத்திய அரசு பணிகளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தார்.