< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
9 Nov 2022 6:44 PM GMT

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளான வருகிற 14-ந்தேதி தமிழக அரசின் உத்தரவின்படிதமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியே நடத்தப்படவுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களை போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய 6 தலைப்புகளிலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப் புறா நேரு ஆகிய 6 தலைப்புகளிலும் பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்பவர்களில் அரசு பள்ளியை சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. பள்ள மாணவ-மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக ஒரு கல்லூரிக்கு 2 பேர் என அந்தந்த கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு 2 பேர் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்