< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்தகாட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் பென்னாகரம் வனத்துறையினர் நடவடிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்தகாட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் பென்னாகரம் வனத்துறையினர் நடவடிக்கை

தினத்தந்தி
|
12 May 2023 6:31 PM GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல் அருகே சாலையோரம் சுற்றித்திரிந்த காட்டு யானையை வணங்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யானை முன்பு வணங்கி வீடியோ

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானை முன்பு ஒருவர் வணங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ பெரும் வைரல் ஆனது.

வனத்துறையினர் விசாரணை

இந்த நிலையில் வீடியோ காட்சிகள் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யானையை வணங்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் பென்னாகரம் அருகே உள்ள மேக்லாம்திட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என தெரியவந்தது. இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, யானையை பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்கி சென்று வணங்கியதாகவும், அதே நேரத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர் இந்த வீடியோவை எடுத்ததும், பின்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இது தொடர்பாக பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரித்தார். முதலில் அவர் தனக்கு இதுபோன்ற சம்பவம் நடந்தது ஞாபகம் இல்லை என்று கூறிய நிலையில், பின்னர் நண்பர் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகேசனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்ைக எடுத்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, 'ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காப்புக்காட்டில் உள்ளே நுழைந்து புகைப்படம் மற்றும் செல்பி வீடியோ எடுக்கக்கூடாது. மீறினால் வனச்சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்