< Back
மாநில செய்திகள்
மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
நீலகிரி
மாநில செய்திகள்

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
16 Dec 2022 6:45 PM GMT

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

கூடலூர்

நீலகிரி மின் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா, கடந்த 14-ந் தேதி தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கூடலூரில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், ஐந்து முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம், காந்தி திடல் வழியாக கோழிக்கோடு சாலையில் பேரணி சென்றது.

பின்னர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் தேவையின்றி மின்விளக்குகள், விசிறிகள், டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். வீடுகளில் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யலாம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் முத்துக்குமார், அப்துல் மஜீத் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்