< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
13 Sep 2024 5:13 AM GMT

கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசு தான் வழங்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கேரளா முதல் இடமும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கும் நிலையில் மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தினால்தான் நிதி வழங்க முடியும் என மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏற்கனவே இருமொழி கொள்கையை கொண்டு சமச்சீர் கல்வி கொள்கையை ஏற்படுத்தி விட்டனர்.

தமிழக அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளதால் இதுவரை 1½ லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்