< Back
மாநில செய்திகள்
அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கியது
கரூர்
மாநில செய்திகள்

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கியது

தினத்தந்தி
|
25 Jun 2022 6:54 PM GMT

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கியது. தற்போது 1 கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 ஆயிரம் ஏக்கர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது.தற்போது முருங்கை மரங்கள் பூத்து காய்கள் காய்க்கத் தொடங்கி உள்ளன. முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.120-க்கு விலைபோனது. தற்போது முருங்கைக்காய் சீசன் தொடங்கி வரத்து அதிகரித்ததால் 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போகிறது.

கமிஷன் மண்டிகளில்...

ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்றுவிடுவார்கள்.அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களுரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். தற்போது அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்