< Back
மாநில செய்திகள்
மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லையா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மாநில செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லையா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தினத்தந்தி
|
16 Jun 2022 6:42 PM GMT

மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காவிரி நதிநீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் முழு உரிமை உண்டு. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பன்மாநிலங்களுக்கான நதிநீர்ப் பங்கீட்டில் கீழ்மடை மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேல்மடை மாநிலம் தன்னிச்சையாக அணை கட்டிக்கொள்ள வழிவகை இல்லை.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்கின்றபோது அதை எதிர்க்கின்ற உரிமை தமிழ்நாட்டிற்கு நிச்சயம் உண்டு. எனவே, தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக மாநில முதல்-மந்திரியின் கூற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது.

மனிதாபிமானமற்ற செயல்

இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி, பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதை எதிர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் கூறியிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுவதைத் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கும் செயல்தான் மனிதாபிமானமற்ற செயல் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, முதல்-அமைச்சர், காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்