
விருதுநகர்
தி.மு.க. ஆட்சியில் தக்காளி முதல் தங்கம் வரை விலை உயர்வு

தி.மு.க. ஆட்சியில் தக்காளி முதல் தங்கம் வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் சாட்சியாபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆனையூர் பஞ்சாயத்து தலைவரும், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளருமான லயன் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் தான் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் தி.மு.க. ஏழை மக்களை வஞ்சிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி முதல் தங்கம் வரை விலை உயர்ந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத்துக்கு சேர்ந்து தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்காகத்தான் தி.மு.க. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஓட்டுக்காக ஆட்சி நடத்துபவர்கள் தி.மு.க.வினர். நாட்டுக்காக ஆட்சி நடத்துபவர்கள் அ.தி.மு.க. யார்? வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சந்தானம், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, சாம், டாக்டர் விஜயஆனந்த், வக்கீல் முத்துப்பாண்டி, தேவர்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை, ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், ரமணா, தனுஷ், இளநீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.