< Back
மாநில செய்திகள்
டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதி விபத்து - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு
மாநில செய்திகள்

டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதி விபத்து - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
2 May 2023 10:38 AM GMT

ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து விட்டதால், பாதுகாப்பு கருதி அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், இன்று கோலார் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல இருந்தார். இதற்காக ஜக்கூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பகிலு சட்டமன்ற தொகுதிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தனி ஹெலிகாப்டரில் டி.கே.சிவகுமார் பயணம் செய்த நிலையில், திடீரென எதிரே வந்த கழுகு ஒன்று ஹெலிகாப்டர் மீது மோதியது. இதில் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து விட்டதால், பாதுகாப்பு கருதி உடனடியாக ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து டி.கே.சிவகுமார் பங்கேற்க இருந்த கோலார் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.



மேலும் செய்திகள்