புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே கட்டிட உரிமையாளர்களுக்குள் தகராறு: மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு
|புதுக்கோட்டை அருகே கட்டிட உரிமையாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 5 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கட்டிட உரிமையாளர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை வங்கிக்கு செல்லும் முன்பக்க ஷட்டர் கதவை கட்டிட உரிமையாளர் ஒருவர் பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் வங்கிக்கு வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள் வங்கியின் முன்பக்க ஷட்டர் கதவு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த வடகாடு போலீசார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் வங்கியின் முன்பக்க ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளையின் ஊழியர் ஒருவர் வங்கி பூட்டை திறந்தார். பின்னர் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கி அலுவலகத்திற்குள் சென்றனர்.
மத்திய கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.