< Back
மாநில செய்திகள்
டி.கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
மதுரை
மாநில செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தினத்தந்தி
|
23 Sep 2023 9:27 PM GMT

டி.கல்லுப்பட்டி அருகே தொட்டி கட்ட குழி தோண்டிய போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே தொட்டி கட்ட குழி தோண்டிய போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர்தொட்டி கட்டுவதற்கு குழி தோண்டிய போது பெரிய பானை இருப்பதாக அவ்வூரை சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, அவை பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் பாண்டியராஜிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் நேரடியாக களத்திற்கு வந்து முதுமக்கள் தாழியை கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-

நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி உடைந்த நிலையில், கிட்டத்தட்ட 7 அடி ஆழம் குழி தோண்டும் போது, கண்டறியப்பட்டது.முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது.இந்த முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி, சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும். இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைஓடுகள், உடைந்த நிலையில் உள்ளது.

எலும்புகள்

முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு, மேல்பகுதி, கை, கால் எலும்புகள், உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்ததற்கான சான்றாக கண்டறியப்பட்ட இந்த முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்