< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு; பேரூராட்சி நடவடிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு; பேரூராட்சி நடவடிக்கை

தினத்தந்தி
|
2 Feb 2023 11:23 AM GMT

மாமல்லபுரத்தில் சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

சட்ட விரோத குடிநீர் இணைப்புகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒத்தவாடை தெரு, தேவனேரி, வடக்கு மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலர் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை முறையாக அணுகி குடிநீர் இணைப்பு பெறாமல் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை பயன்படுத்தி வந்தனர்.

பல முறை பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைப்புகளை துண்டிக்குமாறு குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தினர். ஆனால் யாரும் குடிநீர் இணைப்புகளை துண்டித்து கொள்ளவில்லை.

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இனி கோடை காலம் வர உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் வேளையில், குடிநீர் தேவையும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்