< Back
மாநில செய்திகள்
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல்
சிவகங்கை
மாநில செய்திகள்

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
19 July 2023 6:45 PM GMT

காளையார்கோவில் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காளையார்கோவில்

காளையார்கோவில் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின் பேரில் சிவகங்கை மண்டல போக்குவரத்து அதிகாரி மூக்கையன் அறிவுறுத்தலின் பேரில் சிவகங்கை மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் காளையார்கோவில் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 தனியார் பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், தனியார் பள்ளி வாகனங்களுக்கு முறையான அனுமதியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

அறிவுரை

பள்ளி பணிக்காக என்ற வார்த்தை வாகனத்தின் முன்னும் பின்னும் எழுதபட்டிருக்க வேண்டும். வாகனத்தின் கதவுகள் முறையாக மூடியிருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வாகன டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

பள்ளி வாகனத்தில் நடத்துநர் உரிமம் பெற்றிருப்பவர் ஒருவர் வாகனத்திலிருந்து குழந்தைகளை இறக்கி முறையாக பெற்றோர் கையில் ஒப்படைக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி சம்பந்தமான வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்