< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
12 Oct 2022 8:51 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை மேலபொன்னகரம் 56-வது வார்டு இளந்தோப்பு 2-வது தெருவில் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் மழைநீரோடு கலந்து ஓடுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும்.

அன்பழகன், மேலபொன்னகரம்.

குண்டும்-குழியுமான சாலை

மதுரை கோ.புதூர் ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் இருந்து தொழிற்பேட்டை செல்லும் மெயின் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் பள்ளங்களில் தேங்கி வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், மதுரை.

சகதியாக மாறிய சாலை

மதுரை 94-வது வார்டு எம்.எம்.சி. காலனி, காவிரி நகர் பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்ட தால் மோசமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலை சகதியாக மாறி வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

செந்தில், அவனியாபுரம்.

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை திருமலை நாயக்கர் மகால் பகுதியை சுற்றி குப்பைகள் அதிக அளவில் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.

குரங்குகள் தொல்லை

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களையும் சேதப்படுத்துகிறது. எனவே இந்த குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேலூர்.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 21-வது வார்டில் உள்ள குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைப்பார்களா?

ரதி, மேலூர்.

பள்ளி முன் பள்ளம்

மதுரை காமராஜர் சாலை நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புள்ள சாலை பள்ளமாக காணப்படுகிறது. மழை பெய்தால் பள்ளியின் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பள்ளி மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி முன்பு உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

சிவக்குமார், காமராஜர் சாலை, மதுரை.

சாலையில் தேங்கும் மழைநீர்

மதுரை மாநகராட்சி 2-வது வார்டு அசோக்நகர் பகுதி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவுன்ராஜ், மதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டிக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயநாதன், சோழவந்தான்.

அவசரகதியில் பாலப்பணி

மதுரை மேலூர் அருகே உறங்கான்பட்டியில் பாலம் கட்டும் பணிகள் அவசர கதியில் கட்டப்படுகிறது. இதனால் பாலமானது வலுவிழந்து சீக்கிரம் சேதமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளை கவனித்து சரியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சிதம்பரம், உறங்கான்பட்டி.

மினிபஸ் மீண்டும் இயக்கப்படுமா?

மதுரை திருப்பரங்குன்றம்-நாகமலைபுதுக்கோட்டைக்கு மினி பஸ்கள் வந்து சென்றன. தற்போது அந்த பஸ்கள் வருவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது ஆட்டோவிலோ வரக்கூடிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ், திருப்பரங்குன்றம்.

Related Tags :
மேலும் செய்திகள்