< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
12 Sep 2022 8:03 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேடு பள்ளமான சாலை

மதுரை மாவட்டம் குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள அன்பு நகர் முதல் எஸ்.ஆலங்குளம் வரை மற்றும் மீனாட்சிபுரம் முதல் செல்லூர் வரை உள்ள சாலை சேதமடைந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகுமார், குலமங்கலம்.

அடிப்படை வசதி வேண்டும்

மதுரை தெற்கு வெளிவீதி காஜிமார்தோப்பு 6-வது சந்து 3- வது தெருவில் இருந்து பள்ளிவாசல் தெருவரை சாலையில் கழிவுநீர் தேங்கி, குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலையும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், காஜிமார் தெரு, மதுரை.

எரியாத மின்விளக்கு

மதுரை திருப்பரங்குன்றம் அம்பலக்காரர் தெருவில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. எனவே மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, திருப்பரங்குன்றம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு கோச்சடை பஸ் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது.இதனால் கோச்சடை பஸ் நிலையத்தில் இருந்து காளவாசல் சென்று மாற்று பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்லூரி, கோவில்களுக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் கோச்சடையில் இருந்து திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

ராஜன், திருப்பரங்குன்றம்.

சேறும், சகதியுமான சாலை

மதுரை சித்திரகாராதெரு சாலையின் இருபுறமும் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இங்கே வரும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிய கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சந்தனகுமார்,மதுரை,

Related Tags :
மேலும் செய்திகள்