< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 July 2023 6:08 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நம்பர் இல்லாத நம்பர் பிளேட்

திருச்சி மாவட்டத்தில் ஏராளமான வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன. இதில் சில இருசக்கர வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் நம்பர்களை முறையாக எழுதாமல் அவற்றை மாடல் மாடலாக எழுதுவதினால் அந்த வண்டி நம்பரை எளிதில் கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தங்களின் வண்டி நம்பரை நம்பர் பிளேட்டில் எழுதாமல் தங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு சென்று வருகின்றனர். இதனால் இந்த வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் போது அந்த வாகனங்களை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், திருச்சி.

தடுமாறும் வாகன ஓட்டிகள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தில் இருந்து வடக்கு விசுவைக்கு செல்லும் பிரதான சாலையின் வளைவோரம் நாணல்கள், கோரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வளைவில் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த வரியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம்.

தூர்ந்து வரும் கழிவுநீர் வாய்க்கால்

திருச்சி பொன்மலைப்பட்டி 45-வது வார்டு பாத்திமா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் தூர்ந்துபோன நிலையிலும், ஒரு சில இடங்களில் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜோசப், பாத்திமா தெரு.

அச்சுறுத்தும் அரச மரம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி 12-வது வார்டு அரிஜன தெரு எம்.ஜி.ஆர். காலனியில் பழமையான ஓட்டுவில்லை வீடுகளில் மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களின் வீடிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிவருகிறார்கள். அந்த பாழடைந்த கிணற்றின் பக்கவாட்டில் முளைத்த அரசமரம் ஒன்று தற்போது வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. காற்றடிக்கும்போதெல்லாம் அரசமரம் ஓட்டு வீட்டின் மீது விழுந்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அரச மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரமேஷ், தளுகை.

மேலும் செய்திகள்