< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Jun 2023 5:33 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

கரூர் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் பகுதிக்கும், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கரூர் பகுதிக்கும். அதேபோல் பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கொடுமுடி பகுதிக்கும், கொடுமுடி பகுதியில் இருந்து பரமத்தி வேலூருக்கும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு டவுன் பஸ்களில் ஒரு சில பஸ்கள் மட்டும் எல்.எஸ்.எஸ். பஸ்களாக இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து டவுன் பஸ்களும் தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான இலவச பஸ்களாக செயல்படுகிறது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நின்று கொண்டிருக்கும் பெண்கள் அரசு டவுன் பஸ்களில் ஏறி செல்வதற்கு பஸ்சை நிறுத்தினால், பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், வேலாயுதம்பாளையம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சத்தியமங்களம் ஊராட்சி அய்யர்மலை கோவில் மற்றும் கலை கல்லூரி செல்லும் வழியில் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

காளிதாஸ், குளித்தலை.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மேம்பாலத்து கீழ் உள்ள புதுரோடு பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜேஷ்குமார், வேலாயுதம்பாளைம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே புகழூர் வாய்க்கால் பகுதியிலிருந்து கட்டிபாளையம் பகுதிக்கு மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தின் வழியாக கம்பிகள் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் பகுதியில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அதன் அருகே உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனத்தின் மீது மின்கம்பி பட்டு விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. அதேபோல் மின் கம்பிகள் திடீரென அருந்து விழுந்தால் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜேஸ்வரி, திருக்காடுதுறை.

மேலும் செய்திகள்