< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Jun 2023 7:13 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை தாலுகா, முள்ளூர் முதல் கும்முப்பட்டி வரையில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையின் வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், முள்ளூர்.

சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியவயல் செல்லும் சாலையின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்துகள் நடக்கும் முன்பு சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை சாலையோரம் அமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தீபாபிரபு, மருதுபாண்டியர் நகர்.

பயன்பாட்டிற்கு வராத பஸ் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பஸ் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பஸ் நிலைய வெளி பகுதியில் தகர கொட்டகை அமைக்கும் பணிக்காக பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்படவில்லை. எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே கறம்பக்குடி பஸ் நிலைய கட்டிடத்தை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், கறம்பக்குடி.

தார்சாலை வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, புள்ளான்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜா பண்ணை சாலை கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வீடுகள் மற்றும் தங்களது விவசாய தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் வரை அனைவரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் துறை சார்ந்த அதிகாரிகள் தரமான தார் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புள்ளான்விடுதி.

மேலும் செய்திகள்