< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Jun 2023 7:08 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிக்கடி விபத்து

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் அதிகம் நடக்கிறது. இதனால் உயிர் பலி ஏற்படுகிறது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

மண் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளுக்காக டிப்பர் லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. அனைத்து லாரிகளிலும் மண் ஏற்றி செல்லும்போது தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். கோடை காலம் முடிந்து பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ- மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் நேரமான காலை 8 மணி முதல் 9.30 வரையிலும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரமான 4 மணி முதல் 5 மணி வரையிலும் இப்பகுதியில் லாரிகளை இயக்க தடை விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நீலமேகம், சிந்தாமணி.

பயன்பாட்டிற்கு வராத மின் விளக்கு

அரியலூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு மாத கணக்கில் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜோதி, அரியலூர்.

மேலும் செய்திகள்