< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 May 2023 7:51 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வேண்டும்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் அது குடிநீர் தொட்டி என்று தெரியாமல் அவற்றில் கை, கால், முகம் கழுவுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? என தெரியாமல் அந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இங்கு குரங்குகள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் விஷப் பாம்புகள் சுற்றி திரிவதினால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் வந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தேவையற்ற இடத்தில் வேகத்தடை

பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர்-செட்டிகுளம் செல்லும் சாலையில் டி.களத்தூர் கிராமப் பகுதியில் சாலையில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சில இடங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜீ, டி.களத்தூர்.

மேலும் செய்திகள்