< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 Jan 2023 6:50 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்தில் கழிவுநீர் கலப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம் வடக்கிப்பட்டியில் துலுக்கன் குளம் உள்ளது. இக்குளத்து நீர் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இக்குளம் சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் தற்போது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அக்குளத்தில் உள்ள பல வகையான மீன்கள் இறந்து விட்டன. இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார் சாலை வேண்டும்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பட்டி ஆவாரம்பட்டி சத்தியமூர்த்தி நகரில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை தற்போது சிதிலமடைந்த ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட பணி

திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிட காலனியில் 4 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், கால்நடைகள் இந்த குழியில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட்-லால்குடி செல்லும் மெயின் ரோட்டில் டோல்கேட்டில் இருந்து தாளக்குடி வரை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. மேலும் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது வானத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

காட்சி பொருளான ரேஷன் கடை

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், மேலசி தேவி மங்கலம் கிராமம் போலீஸ் காலனி அருகே ரேஷன் கடை கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. பலமுறை இந்த ரேஷன் கடையை திறப்பதற்காக முயற்சி செய்தும் இன்னும் காட்சி பொருளாகவே இருக்கிறது. அருகில் உள்ள கிராமத்திற்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்