< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Dec 2022 7:15 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் கொட்டப்படும் கால்நடை கழிவுகள்

அரியலூர் மாவட்டம், குறிஞ்சான்குளத்தில் அரசுநிலையிட்டான் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் ஓரத்தில் செல்லும் சாலை ஓரத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளின் கழிவுகளை கொட்டுவதினால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் மழை பெய்யும்போது இந்த கழிவுகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்பினால் எங்கு தெருநாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்களை வெளியே அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் திருப்பத்தில் சாலையில் இருந்த பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தில் சிமெண்டு கலவைகளை கொட்டி சரி செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் தாழ்வான பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தொடரும் விபத்துக்கள்

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி ஜி.கே.எம். நகர் அருகே சாலையோரத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் மது பிரியர்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் மது போதையில் செல்பவர்கள் விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் இந்த சாலையில் வேகத்தடையோ அல்லது சாலையின் குறுக்கே பேரிக்காடுகளோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்