< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Nov 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் நிலையம் அமைக்கப்படுமா ?

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் அதிகளவில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், சேலம், சென்னை, கோவை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் என பல்வேறு வெளியூர்களுக்கு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். மேற்படி அரியலூர் பஸ் நிலையம் சிதிலமடைந்ததை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு புதிய பஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. தினமும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் வெயிலில் நீண்ட நேரம் நின்று வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி கிராம புற மாணவர்கள், மாணவிகள் வீடுகளுக்கு செல்வதற்கு நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் போது சில சமயங்களில் மழை பெய்வதால் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரம் நனைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சரிவர அமைக்கப்படாத பணிகள்

அரியலூர் மாவட்டம் காவனூர் பஞ்சாயத்து உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் காலனி தெருவில் இருந்து மயானம் கொட்டகை வரை கப்பி சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்நிலையில் காலனித்தெரு பகுதியில் இருந்து மயான கொட்டகை பகுதி வரை இருபுறமும் உள்ள நீர்வரத்து வாய்க்காலை சரியாக அகலபடுத்தவில்லை. மேற்படி சாலையை அரசு அதிகாரிகள் அளந்து கொடுத்த அளவுகளின்படி சாலை அமைக்காமல் உள்ளது. மேலும் நீர்நிலை பகுதிகளை சரியாக தூர்வாரமல் இருப்பதால், சில இடங்களில் மட்டும் பள்ளம் தோண்டியுள்ளதால், தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரையான் குறிச்சி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அய்யப்ப பக்தர்கள் சிரமம்

அரியலூர் டவுன் தெற்கு பகுதியில் வசிக்கும் அய்யப்ப பக்தர்கள் இப்பகுதியில் அமைந்துள்ள ஒப்பிலாத அம்மன் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக மாலை அணிந்து கொண்டு, பாத பூஜைகள் செய்து இரவு தங்குவதற்கான வசதிகள் அனைத்தையும் பக்தர்கள் தங்களின் சொந்த செலவில் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கோவில் பூட்டப்பட்டு இறைவழிபாடு செய்ய அனுமதி தர மறுக்கப்படுகிறது. இதனால் அய்யப்ப பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிற்காமல் செல்லும் நகர பஸ்கள்

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து தஞ்சைக்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் நகர பஸ்கள் பெரியமறை, சுள்ளங்குடி, விலுப்பணகுறிச்சி ஆகிய ஊர்களில் நிற்காமல் செல்வதினால் இப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நகர பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதுடன் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்