< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Oct 2022 7:08 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வடிகால் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் 4-வது வார்டு மேலத்தெருவில் கல்லாற்றில் இருந்து பேரையூர் ஏரி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரி ஊருக்குள் வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மக்களை கடிக்கும் தெருநாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதி மக்களை கடித்து குதறுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே 3 பேர் நாய்கள் கடித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளியை சுற்றி கட்டப்படும் கால்நடைகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், ஓலைப்பாடி அரசு பள்ளியைச் சுற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கால்நடைகளை கட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சி கழிவுகள், கட்டிடக்கழிவுகள், அழுகிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பர பதாகை அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நிற்கும் இடத்திலே பெரிய அளவிலான விரம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது காற்றடி மழை காலம் என்பதால் இதன் அருகே பொதுமக்கள் நிற்கும்போது சாய்ந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விளம்பர பதாகைகளை அகற்றிவிட்டு இப்பகுதியில் விளம்பர பதாகை வைக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெரம்பலூரில் யூரியா உரம் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் மற்றும் வி.களத்தூரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி மக்காச்சோள பயிருக்கு யூரியா உரம் தெளிக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் உரக்கடைகள் உரங்களின் விலையை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்