< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Sep 2022 6:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகளை கடிக்க வரும் தெருநாய்கள்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைத்திடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்து அபாயம்

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை ஏரிக்கரையில் வளைவான பகுதி உள்ளது. இந்த இடத்தில் சாலையின் ஓரத்தில் ஆள் உயரத்திற்கு புல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வளைவு பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லும்போது எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எசனை ஏரிக்கரை பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள புல் புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீரமைத்தும் பலனில்லை

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பழுதடைந்த தார் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் சீரமைக்கப்ப்டட சாலை மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சில சமயங்களில் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேடு, பள்ளமான சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பின்புறம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்வதற்காக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் சாலை போடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெப்பக்குளத்தில் கொட்டப்படும் மண்

பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம் கிராம ஊராட்சியில் கிழக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள நல்ல தண்ணீர் தெப்பக்குளம் உள்ளது. முன்பு ஒரு காலத்தில் இந்த குளம் கிராம பொதுமக்களின் குடிநீரை பூர்த்தி செய்து வந்தது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் உள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் உயர இந்த குளம் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதோடு, கிராம ஊராட்சியில் கால்வாய் வடிகால் வசதி ஏற்படுத்த தூர்வாரிய மண்ணை வண்டி, வண்டியாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த தெப்பக்குளத்தை மண்ணை கொட்டி கொட்டி மூடி விடுவார்கள் என்று பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தை கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்