< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Sep 2022 7:10 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாலம் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு புகழூர் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளை மேய்ப்பவர்கள் என ஏராளமானோர் இந்த பாலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல்ஆனதால் பாலம் சிதலடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை அப்புறப்படுத்தி விட்டனர். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை புகழூர் வாய்க்காலின் குறிக்கே பாலம் கட்டி தரப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திறக்கப்படாத சேவை மைய கட்டிடம்

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி சார்பில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை திறந்து வைத்து எந்த சேவையும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்து வரும் நீர்த்தேக்க தொட்டி

கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்குள்ள ரேஷன் கடை அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் அந்தத் தொட்டியில் ஏற்றப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், கட்டிபாளையத்திலிருந்து கந்தம்பாளையம் செல்லும் தார்சாலை ஓரத்தில் நெடுகிலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை தீண்டி பல்வேறு மர்ம காய்ச்சல்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் மக்கள் அச்சம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல். சாலை, காந்தி நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்