< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Aug 2022 5:51 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்சாலை

அரியலூர் சிவன் கோவிலிலிருந்து பஸ் நிலையம் வரை செல்லும் தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, தழுதலைமேடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால் சிறிய அளவிலான மழை பெய்தால் கூட இப்பகுதியில் சாலைகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உடைந்த தரைபாலம்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி அம்பேத்கர் நகரில் உள்ள மண் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு குழியாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சரிசெய்வதுடன் இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

அரியலூரில் இருந்து திருமானூர், திருவையாறு, கல்லக்குடி டால்மியாபுரம், வி.கைக்காட்டி, உடையார்பாளையம், பாடாலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து வி.கைக்காட்டி மற்றும் கீழப்பழுவூர் போன்ற பகுதிகளுக்கு டவுன் பஸ் வசதி இல்லை. புறநகர் பஸ்களில் தான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்ல வேண்டும். அந்த பஸ்களும் சில பஸ் நிறுத்தங்களில் நிற்பத்தில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அரசு டவுன்பஸ் வசதி இல்லாத ஊர்களில் டவுன் பஸ் விட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெளி ஊருக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் நின்று வெளியூர்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Related Tags :
மேலும் செய்திகள்