< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Aug 2022 5:54 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாலத்தில் தேங்கும் ஆகாய தாமரைகள்

காரணம்பாளையம் காவிரி ஆற்றில் புகழூர் வாய்க்கால் தொடங்கி கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவில் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. இந்த புகழூர் வாய்க்காலில் தண்ணீரில் ஏராளமான ஆகாய தாமரைகள் மிதந்து சென்று பாலத்துறை பகுதியில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கின்றன. இதனால் வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, நொய்யல்

பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகரில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சேவை மையத்திலிருந்து விவசாயிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் இங்கு கட்டிடம் கட்டுப்பட்டு பல ஆண்டுகளாகியும் சேவை மையம் தனது சேவையை துவங்காமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் வேலாயுதம்பாளையம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சேவை மையங்களுக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இதனால் தங்களது பகுதியில் சேவை மையம் இருந்தும் வெளியூர்களுக்கு சென்று சான்றிதழ்கள் பெற்று வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேட்டமங்கலம்

சுற்றுச்சுவர் அமைக்கப்படாத பள்ளி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. இங்கு ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த அரசு ஆரம்பப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திவாகர், மரவாப்பாளையம்

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆவரங்காடு புதூர்பிரிவு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை வழி நெடுகிலும் குண்டும், குழியுமாக மிகவும் சிதிலமடைந்து இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆவரங்காடுபுதூர்

எரியாத மின் விளக்குகள்

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1957-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் இந்தப் பாலத்தில் நெடுகிலும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் போடப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து பல மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும்போது இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் பாலத்தில் இருக்கும் குழிகள் தெரியாமல் இருட்டில் குழி மீது விட்டு நிலை தடுமாறி செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், அரவக்குறிச்சி

மேலும் செய்திகள்