< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 July 2023 6:14 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் இருந்து மாணிக்கபுரம் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலையில் பல இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையின் வழியாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி மாவட்டம், லால்குடி சிறுத்தையூர் பாரதிநகரில் 2-வது பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் பள்ளி மாணவ-மாணவிகளையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் தட்டுப்பாடு

திருச்சி மாவட்டம், காமநாயக்கன்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சுமார் 10 நாட்களாக போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீருக்காக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள சிறுகமணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

திருச்சி மாநகராட்சி செல்வ நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் செல்வநகர் 2-வது வீதியின் குறுக்கே செல்லும் 3-வது குறுக்கு தெருவுக்கு செல்லும் சாலைகள் சந்திப்பு இடத்தில் நான்கு புறமும் வாகனங்கள் வேகமாக வருவதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் செல்வநகர் மெயின் சாலையில் மற்ற சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடைகள் இல்லாமல் உள்ளதால் வேகமாக வரும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே விபத்தை தடுக்கும் வகையில், இப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்