< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 July 2023 6:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடைந்த மதகுகள்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் அத்திகுளம் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து பயன் அடைந்து வருகின்றனர். தற்போது இந்த ஏரி தூர்வாரப்பட்ட நிலையில், அதன் மதகுகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் உடைந்த மதுகுகளின் வழியாக மழை நீர் வெளியே சென்று விடுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளதுடன், விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பற்ற குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மதகுகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், விக்கிரமங்கலம்.

பயணிகள் கடும் அவதி

அரியலூரில் தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் அருகில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக இப்பகுதியில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயணிகள் பயன்படுத்த முடியாத வகையில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பயணிகள் வெயிலிலும், சாலையிலும் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வெயிலில் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், அரியலூர்.

இடிக்கப்பட்ட நிழற்குடை

அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை சிதிலமடைந்து இடிந்து விடும் சூழ்நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்த இடத்தில் புதிய நிழற்குடை கட்டப்படாமல் உள்ளதால் வெயில், மழையில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாகமங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி, வல்லகுளம், புங்கங்குழி, ஆண்டிப்பட்டி காடு, கோவிலூர், ஏலாக்குறிச்சி செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகிருஷ்ணன், சுண்டக்குடி.

மேலும் செய்திகள்