< Back
மாநில செய்திகள்
காட்டகரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

காட்டகரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
9 May 2023 7:38 PM GMT

காட்டகரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காட்டகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர், முருகன் உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. இதையொட்டி தினமும் அம்மன், விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து வீதி உலாவும், இரவில் மோடி எடுத்தல், ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறும் நிகழ்ச்சி, காளி ஆட்டம் ஆகியவை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்கரகங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிலர் குழந்தைகளுடன் அக்னி குண்டத்தில் இறங்கினர். சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடியும் தீமிதித்தனர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். திருவிழாவில் மீன்சுருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்