< Back
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
30 May 2023 6:48 PM GMT

தேளூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திரவுபதி அம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி நாள்தோறும் இரவில் பாரத கதை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கண்ணபிரான் ஏரிக்கரையில் திரவுபதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நேர்த்திக்கடனை செலுத்தினர்

பின்னர் தீ மிதிக்க கங்கணம் கட்டிய பக்தர்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கண்ணபிரான் ஏரிக்கரையிலிருந்து ஊர்வலமாக கொல்லங்குழி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்திற்கு சென்றனர். இதனைத்தொடர்ந்து பூசாரி அக்னி குண்டத்தை வணங்கி முதலில் தீ மிதித்தார் அதைத் தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் மற்றும் கங்கணம் கட்டிய 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதையடுத்து, திரவுபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவை காண அருகே உள்ள விளாங்குடி, காத்தான்குடிக்காடு, குடிசல், மண்ணுழி, பெரிய நாகலூர் சின்னநாகலூர், காட்டு பிரிங்கியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திரவுபதி அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்