< Back
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
22 Aug 2022 7:05 PM GMT

திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது.

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள திரவுதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தினமும் இரவில் மகாபாரத நாடகம் மற்றும் இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு உடுத்தி பஞ்சபாண்டவர்களின் சிலைகளுடன் அலங்கரித்து ஊரின் முக்கிய தெருக்கள் வீதி உலா நடந்தது. பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீமிதி திடலில், திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கீழப்பழுவூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலிலும் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்சபாண்டவர்களின் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று தீமிதி திடலை அடைந்தனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து திடலில் இறங்கி தீ மிதித்தனர். இதில் அரியலூர், பெரம்பலூர், மேலப்பழுவூர், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்