தர்மபுரி
தர்மபுரியில்நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்புமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
|தர்மபுரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை பறிப்பு
தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தலட்சுமி (வயது 45). இவர் நேற்று மாலை கடையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
நெசவாளர் காலனி பகுதியில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டனர். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அந்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
போலீசார் விசாரணை
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சாந்தலட்சுமி இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.