< Back
மாநில செய்திகள்
6.40 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரை
நாமக்கல்
மாநில செய்திகள்

6.40 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரை

தினத்தந்தி
|
12 Feb 2023 6:45 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

குடற்குழு நீக்க மருந்து

இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் குடற்குழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத மற்றும் தாய்பால் ஊட்டாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கப்படுகின்றது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 18 ஆயிரத்து 358 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 433 பேருக்கும் என மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 791 பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ரத்தசோகை குறைபாடு

பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம். மேலும் இம்முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன் கள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்