< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோதுகாவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோதுகாவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

தினத்தந்தி
|
1 Sep 2023 7:30 PM GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை பரிதாபமாக இறந்தார்.

திருநங்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் என்கின்ற சந்திரிகா (வயது 33). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் தனது தோழிகளான அரவிந்த் சீமா, முகேஷ் மெகாவதி, பெரியசாமி பெருந்தேவி மற்றும் ஆண் நண்பர் அஜித் ஆகிய 6 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.

ஒகேனக்கல்லில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கல் ஊட்டமலை பரிசல் துறை அருகே அவர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் குளித்தனர். இதில் திருநங்கை சந்திரிகா ஆழமான பகுதிக்கு நீந்தி சென்று குளித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

உடல் மீட்பு

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருநங்கை சந்திரிகாவின் உடலை மீட்டனர். அப்போது அங்கு இருந்த மற்ற திருநங்கைகள் கதறி அழுதனர். பின்னர் திருநங்கையின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி திருநங்கை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்