< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் திடீர் சாவுசிகிச்சையில் அலட்சியம் என உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் திடீர் சாவுசிகிச்சையில் அலட்சியம் என உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 Aug 2023 7:00 PM GMT

தர்மபுரி மாவட்டம் சிவாடி பகுதியை சேர்ந்தவர் வீரகரன் (வயது 23). பட்டதாரியான இவர் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு திரண்டு இருந்த வீரகரனின் உறவினர்கள் கூறுகையில், நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வீரகரனுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அலட்சியமே அவர் உயிரிழக்க காரணம். இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்