தர்மபுரி
தர்மபுரி அருகேதரை மட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து தொழிலாளி சாவுபோலீசார் விசாரணை
|தர்மபுரி:
தர்மபுரி அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி இறப்பு
தர்மபுரி அருகே உள்ள மாட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 73). தொழிலாளியான இவர் தனது தம்பி மாணிக்கத்தின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். இந்த நிலையில் கொளகத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த மாணிக்கம் அங்கு சென்று அந்தப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் அங்கமுத்துவை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அங்கமுத்து ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கமுத்து தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.