< Back
மாநில செய்திகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் காந்திமார்க்கெட் பகுதியை கடந்து செல்ல முடியாமல்    வாகன ஓட்டிகள் திணறல்
திருச்சி
மாநில செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் காந்திமார்க்கெட் பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறல்

தினத்தந்தி
|
17 Dec 2022 7:13 PM GMT

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் காந்திமார்க்கெட் பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் காந்திமார்க்கெட் பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் காந்திமார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. காந்திமார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சரக்கு லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. மேலும் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள மளிகை மண்டி, பழக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கும் சரக்குகள் லாரிகளில் வந்து இறங்குகிறது. இதனால் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தாலும், காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதாலும் திருச்சி-தஞ்சை சாலையில் காந்திமார்க்கெட் அஞ்சுமன்பஜார் போலீஸ் சிக்னலில் இருந்து தர்பார்மேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் திணறல்

இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக கடந்து செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக அந்த பகுதியை கடக்க மட்டுமே நீண்டநேரமாகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் முன்பு வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்தி வைத்து கொண்டு நேரம், காலமின்றி சரக்கு ஏற்றி, இறக்குவதாலும் இவ்வாறு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற போக்குவரத்து நெரிசலால் அவசர ஆம்புலன்சுகளும் துரிதமாக செல்ல முடியாத அவலநிலை நீடித்து வருகிறது. காந்திமார்க்கெட்டுக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் காய்கறிகள் வாங்கவும், மளிகை பொருட்கள் வாங்கவும் வந்து செல்கிறார்கள். ஒரேநேரத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் நடமாடக்கூடிய பகுதியாக காந்திமார்க்கெட் உள்ளது.

தீர்வு காண கோரிக்கை

ஆகவே அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை போக்குவரத்து பிரச்சினைக்கு குறைந்தபட்சம் தற்காலிக மாற்று நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்