< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

தினத்தந்தி
|
1 April 2023 6:45 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவியுடன் நேற்று காலை 8.15 மணி அளவில் வந்தார். ேகாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில் பூரண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கு சென்று கவர்னர் தரிசனம் செய்தார்.

பிரகாரத்தில் உள்ள ஓவியங்கள், சிற்பங்களை பார்த்து வியந்தார். அதன் பிறகு ஆண்டாள் கோவில் மூலஸ்தான கோபுரமான திருப்பாவை தங்க கோபுரத்தை பார்வையிட்டார்.

ஆண்டாள் பிறந்த நந்தவனத்திலும் சாமி தரிசனம் செய்தார். வடபத்ர சயனர் என அழைக்கப்படும் பெரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு, தமிழக அரசின் முத்திரை சின்னமான பெரிய கோபுரத்தை பார்வையிட்டார். ஆண்டாள்கோவில் சார்பில் அவருக்கு நினைவு பரிசை அதிகாரிகள் வழங்கினார்கள். கோவில் சார்பில் ஆண்டாள் கிளி, பிரசாதம் வழங்கப்பட்டது. கவர்னருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

இதையொட்டி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்த கவர்னர், அதன்பின்பு ராஜபாளையத்துக்கு, கல்லூரி விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்