< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
23 Feb 2023 6:45 PM GMT

சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலத்தின் தளம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் மாதாகோவில்கோம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கும், வடபாதிமங்கலம் கிராமத்திற்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு தளம் மற்றும் தடுப்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை மாதாகோவில்கோம்பூர், சாத்தனூர், பழையனூர், நாகங்குடி, கிளியனூர், புனவாசல், உச்சுவாடி, காக்கையாடி, வடபாதிமங்கலம், வேற்குடி, அன்னுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலத்தில் அமைக்கப்பட்ட தளங்கள் பலம் இழந்ததால் ஒன்றன்பின் ஒன்றாக சில தளங்கள் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இடிந்து விழுந்த இடத்தில் தளங்கள் இல்லாமல் போனதால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், வேலைக்கு சென்று வருவோர், பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பழையனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, கால்நடை ஆஸ்பத்திரி போன்ற இடங்களுக்கு சென்று வர அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

தடுப்புகள்

இந்தநிலையில் நடைபாதையில் இடிந்து விழுந்த தளங்களுக்கு பதிலாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மரங்களால் அமைக்கப்பட்ட தளத்தில் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், அவசரமாக சென்று வருபவர்கள் எளிதாக சென்று வர முடியவில்லை. அடுத்தடுத்த தளங்கள் சரிந்து விழுந்தால், தளங்களுக்கு பதிலாக நடைபாலம் முழுவதும் தடுப்புகளாக மாறுமோ என்று அந்்த பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சீரமைத்து தர வேண்டும்

தடுப்புகள் நடந்து சென்று வருவதற்கு ஏதுவாக இல்லை. இதனால் இரவு நேரங்களில் சென்று வருவதில் மிகவும் சிரமம் உள்ளது. மேலும் நடைபாலத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாலத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்