< Back
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கையொட்டி   கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குவிந்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
3 Aug 2022 4:43 PM GMT

ஆடிப்பெருக்கையொட்டி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குவிந்த பொதுமக்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கையொட்டி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குவிந்த பொதுமக்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடக்கம் முதல் அம்மன் கோவில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினத்தில் கங்கை, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுவதோடு, நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி வழிபடுவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடுவர் என்பதால் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரை மட்டும் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டிருந்தனர்.

இரும்பு தடுப்புகள்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அணையில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள மார்கண்டேஸ்வரர் கோவில் முன்புறம் உள்ள நந்தி சிலை வாயில் இருந்து வந்த தண்ணீரிலும், தென்பெண்ணை ஆற்றில் ஓடும் தண்ணீரிலும் புனித நீராடி வழிப்பட்டனர். புதியதாக திருமணமான பெண்கள் தாலி மாற்றி வழிபட்டனர்.

மேலும் பொதுமக்கள் அணை பூங்காவின் அழகை ரசித்தனர். அணைப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தவும், அணையின் நுழைவு சீட்டு வழங்கும் பகுதியிலும் இரும்பு தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அணைப்பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும், தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியிலும் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பேய் விரட்டும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அத்துடன் அணையில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவினையொட்டி பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி பிடித்து கொள்ள, பூசாரி சாட்டையால் 3 முறை அவர்களது கைகளில் அடித்து பேயை விரட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவுபடி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்