< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
24 May 2023 7:00 PM GMT

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்து வரும் சாலை

திண்டுக்கல்லை அடுத்த கோம்பையான்பட்டியில் இருந்து மணியக்காரன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து வருகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சிதிலமடைந்து வரும் மின்கம்பம்

குஜிலியம்பாறையை அடுத்த தி.கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனே சீரமைக்க வேண்டும்.

-சண்முகம், தி.கூடலூர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் திருநகர் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே திருநகர் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், பழனி.

கைப்பிடியுடன் சாய்வுதளம் வேண்டும்

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்படவில்லை. இதனால் ஊராட்சி அலுவலகத்துக்குள் செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி அலுவலகத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும்.

-ஜெயராம், கொடைக்கானல்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலின் வடக்கு நுழைவு வாயிலுக்கு செல்லும் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீரை வெளியேற்றி, தெருவை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவாஜி, சின்னமனூர்.

அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

உத்தமபாளையம் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

தார்சாலை அமைக்க வேண்டும்

தேனி அரண்மனை புதூர் விலக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாற்றுவழியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க வேண்டும்.

-செல்வேந்திரன், தேனி.

லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

பழனி காந்திமார்க்கெட் சாலை, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரத்தில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலைகளில் லாரிகளை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், பழனி.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் பஸ்நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ்சுக்காக அங்கு காத்திருப்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை உடனே சீரமைக்க வேண்டும்.

-முருகன், கூடலூர்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

---------------

Related Tags :
மேலும் செய்திகள்