< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 March 2023 7:00 PM GMT

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

பழனி ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், பழனி.

அடிப்படை வசதிகள் வேண்டும்

தேவாரம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தெருவில் தார்சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவில் செல்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேட்டுப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

-சிவாஜி, சின்னமனூர்.

தெருநாய்கள் தொல்லை

பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருவில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-ஜெகநாதன், பச்சளநாயக்கன்பட்டி.

வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

உத்தமபாளையம் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்று விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடைகள் மீது வெள்ளைநிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்ரூதீன், உத்தமபாளையம்.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி பஸ் நிறுத்ததில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் கால் கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள் நிழற்குடை இல்லததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தேனியை அடுத்த முத்துத்தேவன்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறித்த அறிவிப்பு பலகை இல்லை. மேலும் வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வேகத்தடைகள் மீது வெள்ளைநிற வர்ணம் பூசுவதுடன் அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.

-பொதுமக்கள், முத்துத்தேவன்பட்டி.

ஏ.டி.எம். எந்திரம் பழுது

கோபால்பட்டி காளியம்மன் கோவில் அருகே செயல்படும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த எந்திரம் மூலம் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். பக்கத்து ஊர்களுக்கு சென்று பணம் எடுக்கும் நிலையே தற்போது வரை உள்ளது. எனவே ஏ.டி.எம். எந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நல்லேந்திரன், கோபால்பட்டி.

சேதமடைந்த சாலை

தாடிக்கொம்பில் இருந்து உலகம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

-கண்ணகி, திண்டுக்கல்.

கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்

உத்தமபாளையம் ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், உத்தமபாளையம்.

வெயிலில் வாடும் பயணிகள்

வீரபாண்டி அருகே தப்புக்குண்டு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இந்த பஸ் நிறுத்தம் அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு கலைக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவை செயல்படுகிறது. எனவே அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் வெயிலில் வாடும் நிலை உள்ளது. அதேபோல் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், வீரபாண்டி.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்