< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கேட்பாரற்று கிடக்கும் அடிகுழாய்

திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள அடிகுழாய் சேதமடைந்து பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் முறையாக தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த அடிகுழாயை சீரமைக்க வேண்டும்.

-முத்து முகேஷ், திண்டுக்கல்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டிக்கு செல்லும் சாலையில் வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

ஆக்கிரமிப்பின் பிடியில் கழிவுநீர் கால்வாய்

நத்தம் தாலுகா குட்டுப்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறியதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

-ராஜா, குட்டுப்பட்டி.

குழாய் உடைந்து விணாகும் குடிநீர்

பழனியாண்டவர் கலைக்கல்லூரி அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அழகேந்திரன், பழனி.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பழனி அடிவாரம் பழைய தபால் அலுவலக சாலையில் திருவள்ளுவர் பள்ளி அருகில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ஆனந்தன், பழனி.

குப்பையால் சுகாதாரக்கேடு

ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. சில நேரங்களில் அந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ராஜன், போடிதாசன்பட்டி.

இரவு நேர பஸ் இயக்கப்படுமா?

கூடலூரில் இருந்து குமுளிக்கு தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் பிறகு பல மணி நேரத்துக்கு பிறகு வெளியூரில் இருந்து கூடலூர் வழியாக குமுளிக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் குமுளிக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். எனவே இரவு 8 மணிக்கு மேல் குறிப்பிட்ட நேரத்தில் கூடலூரில் இருந்து குமுளிக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகேசன், கூடலூர்.

சாலையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்

கம்பம் 15-வது வார்டு சாவடி தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டன. அப்போது கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் சாலையோரத்திலேயே கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

-சக்திவேல், கம்பம்.

பயன்பாடு இன்றி கிடக்கும் சலவை கூடம்

கடமலைக்குண்டுவை அடுத்த தர்மராஜபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சலவை கூடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. எனவே புதர்களை அகற்றி சலவை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பொதுமக்கள், தர்மராஜபுரம்.

குண்டும், குழியுமான சாலை

வருசநாடுவில், முருக்கோடை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவில் அவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், முருக்கோடை.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்